தனது தடுப்புக் காவலைக் கண்டித்து, டெல்லி மற்றும் லக்னோவில் ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் மன்னிப்புக் கேட்டார்.
மேலும், தொண்டர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனவும் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.
குஜராத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். இன்று புஜ் நகருக்கு வந்தார். அவரிடம், செய்தியாளர்கள் தடுப்புக் காவல் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினரும் - பாஜகவினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர். தாங்கள் தாக்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன். மேலும், ஆம் ஆத்மி கட்சியினர் வன்முறையை ஒருபோதும் கையில் எடுக்க வேண்டாம் என்றார்".
டெல்லி மோதல் சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.