தமது கட்சியைக் காட்டிலும், நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி, பாஜக மிகப் பெரிய தவறு செய்வதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தத் தவறை பாஜக எதிர்காலத்தில் நிச்சயம் உணரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிஎன்பிசி ஆவாஸுக்கு அளித்த பேட்டியில், "பாஜக கட்சியைக் காட்டிலும் ஒரு நபரை (மோடி) முன்னிலைப்படுத்துகிறது. அவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள்.
இப்போது இல்லையென்றாலும், எதிர்காலத்தில் உணர்வார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கட்சியைவிட ஒருவரை மேலானவராக முன்னிலைப்படுத்த முடியாது
நம் நாட்டில் அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்; அவருக்குக் கீழே செயலர்கள் இருப்பார்கள் என்று பாஜக நினைத்துக்கொண்டிருக்கிறது போலும். நம்முடைய அரசின் வடிவம் அப்படிப்பட்டது அல்ல.
இந்த முன்னிலைப்படுத்தும் விஷயத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயங்குகிறது. எனவே, தற்போது முன்வைக்கப்படுவது ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளே தவிர, பாஜகவுடையது அல்ல என்று தெரிகிறது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் என்பது மிகவும் ஆபத்தானது. பாஜகவின் கொள்கைகளைவிட மிகவும் மோசமானது" என்றார் ப.சிதம்பரம்.