மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் வி.கல்காலி தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கிக்கு ஒரு மனு அனுப்பினார்.
அதில், “பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு அவற்றை பொதுமக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்தனர். அப்போது வங்கி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை தெரிவிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு ரிசர்வ் வங்கியின் பண நிர்வாகத் துறை அளித்த பதிலில், “அது பற்றிய உறுதியான விவரம் தங்களிடம் இல்லை” என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்காலி கூறும்போது, “எனது கேள்விக்கு 11 வாரங்களுக்குப் பிறகு எந்த விவரமும் இல்லை என பதில் அளித்துள்ளது.
இதன்மூலம் போலி ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது பொய் என நிரூபணமாகி உள்ளது” என்றார்.