அரும்பார்த்தபுரம் அரசு உயர் நிலைப் பள்ளியில் கணினியில் பாலியல் படம் பார்த்ததுடன், மாணவிகளுக்கு அவற்றைக் காண்பித்த பிரச்னை தொடர்பாக 4 ஆசிரியர்கள் வியாழக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி அடுத்த அரும்பார்த்த புரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு ஆசிரியர்கள் சிலர் மாணவிகளுக்கு கணினியில் பாலியல் படங்களை காண்பித்து அவற்றைப் பார்க்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் பள்ளி நேரத்தில் பல்வேறு பாலியல் இணையதளங்களில் இருந்து படங்களையும் அந்த ஆசிரியர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து, பெற்றோரிடம் மாணவிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புதன்கிழமை மாணவிகளின் பெற்றோர் திரண்டு பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் இ.வல்லவன், முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆசிரியர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
கல்வித்துறை அமைச்சர் தியாகராஜனிடம் கூறுகையில், "அரும்பார்த்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவி களுக்கு ஆபாசப் படம் காண்பித்த 3 ஆசிரியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பின் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கல்வித்துறை இயக்குநர் வல்லவன், ஆசிரியர்கள் அப்துல் மாலிக், ரஷீத் முகமது, அன்பழகன், சிவக்குமார் உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்ட் செய்து வியாழக்கிழமை பிற்பகல் உத்தரவிட்டுள்ளார்.