கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா, தன் சுற்றுப்பயணத்தின் போது தலித் வீட்டில் ஹோட்டல் உணவு சாப்பிட்டதாக வீடியோ வெளியாகி அது வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் பாஜக ஈடுபட்டுவருகிறது.
இதைத் தொடர்ந்து கர்நாடக மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா.
’தலித் மக்களுக்குக் குரல்கொடுக்கும் கட்சி பாஜக’
அப்போது தலித் வீடுகளில் தங்கி, சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக பேட்டி அளித்த எடியூரப்பா, தலித் மக்களுக்குக் குரல்கொடுக்கும் கட்சி பாஜக என்று கூறியிருந்தார்.
கடந்த சனிக்கிழமை தும்கூர் பகுதியில், குப்பி என்னும் கிராமத்துக்குச் சென்ற எடியூரப்பா, அங்கே இருந்த தலித் குடியிருப்புகளில் சாப்பிட்டதாகக் கூறியிருந்தார்.
ஆனால், எடியூரப்பா தலித் வீட்டில் சாப்பிடவில்லை. ஹோட்டல் உணவையே சாப்பிட்டார் எனக் காங்கிரஸ் மாநில தலைவரும், உள்துறை அமைச்சருமான பரமேஸ்வர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
எடியூரப்பாவின் ஏமாற்று வேலைகளைத் தலித் மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும், காங்கிரஸ் கட்சியே அவர்களின் உண்மையான தோழன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா ஹோட்டல் உணவை உண்ணும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி, வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.