பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் காயத்ரி பிரஜாபதியை சிறையில் சந்தித்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் அவரை ‘குற்றமற்றவர்’ என்று வர்ணித்தார்.
மேலும் பிரஜாபதியை பயங்கரவாதி போல் நடத்துகின்றனர், தான் இதனை பிரதமரிடத்தில் எடுத்து செல்லவுள்ளேன் என்று கூறினார் முலாயம்.
“பிரஜாபதிக்கு எதிராக போலீஸிடம் எந்த சாட்சியங்களும் இல்லை, அவருக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டுள்ளது. அவர் நிரபராதி, பயங்கரவாதிகளை நடத்துவது போல் அவரை நடத்துகின்றனர். பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. நான் பிரதமரிடம் இதனை எடுத்துச் செல்வேன். முடிந்தால் குடியரசுத் தலைவரிடமும் இதனை எடுத்துச் செல்வேன்” என்றார்.
நேற்று ஈத் காரணமாக அனுமதி கிடைக்காததால் இன்று சந்தித்த முலாயம் சிங் யாதவ், பிரஜாபதியுடன் ஒருமணி நேரம் இருந்தார்.
இந்நிலையில் சிறையில் பிரஜாபதியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் முலாயம் மேலும் கூறும்போது, “சிறையில் இருக்கும் பெண்கள் சிலர் முதல்வர் யோகி ஆதித்ய நாத்திற்கு கறுப்புக் கொடி காண்பித்தனர். ஜனநாயகத்தில் கறுப்புக் கொடி காட்ட உரிமை உண்டு, இந்தப் பெண்களும் பயங்கரவாதிகள் போல்
நடத்தப்படுகின்றனர்” என்றார்.