கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைச்சரவை யில் உள்துறை அமைச்ச ராக பதவி வகித்தவர் கே.ஜே.ஜார்ஜ். பெங்க ளூருவில் தொடர்ச்சியாக நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள், ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவியின் மர்ம மரணம் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கியதால், ஜார்ஜ் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த சூழலில், கடந்த ஜூலை 18-ம் தேதி சிக்மகளூரு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்த துணை கண்காணிப்பாளர் கணபதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது மரணத்துக்கு அமைச்சர் ஜார்ஜ் தான் காரணம் என வீடியோவில் அவர் பதிவு செய்தார். இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியில் இருந்து ஜார்ஜ் விலகினார்.
சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் துணை கண்காணிப்பாளர் கணபதியின் தற்கொலையில் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஜார்ஜ் குற்றமற்றவர் என்றும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நேற்று நடந்த எளிமையான விழாவில், ஜார்ஜுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.