இந்தியா

தேஜ்பால் முன் ஜாமீன் மனு விசாரணை மாலை வரை ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மலை 4.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவா நட்சத்திர ஓட்டலில் நவம்பர் 7, 8-ம் தேதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தருண் தேஜ்பால், தன்னுடன் பணியாற்றிய சக பெண் நிருபரை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கோவா மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தேஜ்பாலின் வழக்கறிஞர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை கோவாவுக்கு சென்று பனாஜி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை கைது வாரன்ட் பிறப்பித்த நீதிபதி அனுஜா பிரபுதேசாயே விசாரித்தார்.

நேற்று பாஜக தலைவர்களின் ஊழல் விவகாரங்களை தருண் தேஜ்பால் அம்பலப்படுத்தியுள்ளார். அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே கோவா மாநில பாஜக அரசு சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இன்று இரண்டாவது நாளாக முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் போது, தேஜ்பால் கோர்ட்டில் இருந்தார். முன்னதாக அவர் சிபி-சிஐடி போலீசாரை சந்தித்து விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT