பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்காவின் முடிவு இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மாநில பேரிடர் மீட்பு படைக்கான திறன் கட்டமைப்பு குறித்து 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் தொடங்கியது. இம்மாநாட்டை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசும்போது, “சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதை தடுக்க உலக நாடுகள் இணைந்து பயணிக்க வேண்டும்.
பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியறுவது குறித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அறிவிப்பு, சர்வதேச சமூகத்தில் ஒற்றுமை இல்லாததையும், ஒரு நாடு தனது நலனை மட்டுமே கருத்தில் கொள்வதையும் காட்டுகிறது. எந்தச் சூழ்நிலையில் அமெரிக்கா இவ்வாறு அறிவித்தது என்பதை அறியவேண்டும். இந்த அறிவிப்பு இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அமெரிக்கா தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என நம்புகிறேன்” என்றார்.
ட்ரம்ப் கடந்த 1-ம் தேதி பாரீஸ் ஒப்பந்தம் குறித்த தனது முடிவை அறிவித்தார். அப்போது அவர், இந்த ஒப்பந்தத்தை ஏற்க வேண்டுமானால் முன்னேறிய நாடுகள் பல லட்சம் கோடி டாலர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே இந்தியா கையெழுத்திட்டது” என்றார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, “பணத்துக்கு ஆசைப்பட்டோ அல்லது அச்சத்தின் காரணமாகவோ இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உள்ள உறுதி காரணமாகவே கையெழுத்திட்டது. உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகினாலும், இந்தியா தொடர்ந்து அங்கம் வகிக்கும்” என்றார்.