இந்தியா

டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பாலியல் பலாத்காரம்

செய்திப்பிரிவு

டெல்லியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண்னை 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

டெல்லி ரயில்வே நிலையத்தின் அருகே செவ்வாய் இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பெண்ணைச் சூழ்ந்து கொண்ட ஒரு கும்பல், கத்தியைக் காட்டி அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அந்தப் பெண் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது வழியை மறந்திருக்கிறார்.

ரயில் நிலையத்தின் அருகே இருந்த சிலரிடம் அவர் ஓட்டலுக்குச் செல்லும் வழியை கேட்டுள்ளார். அவருக்கு உதவுவதற்குப் பதிலாக அவரை கடத்திச் சென்ற மர்ம கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரிடம் இருந்த பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இத்தகவலை பாதிக்கப்பட்ட பெண் ஓட்டல் மேனேஜரிடம் கூறியுள்ளார். ஓட்டல் மேனேஜர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT