இந்தியா

இன்று முதல் ஏடிஎம்மில் ரூ.4,500 எடுக்கலாம்: உச்சவரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி

ஐஏஎன்எஸ்

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு ரூ.2,500-லிருந்து ரூ.4,500 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், “பணத் தட்டுப்பாடு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு இப்போது உள்ள ரூ.2,500-லிருந்து ரூ.4,500 ஆக உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனினும், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம் என்ற உச்சவரம்பில் மாற்றம் இல்லை” என கூறப்பட்டுள்ளது.

மேலும் ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதனால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு ரூ.2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

500, 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி ஆகும். ஆனால், கடந்த டிசம்பர் 19-ம் தேதி நிலவரப்படி ரூ.5.92 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி 21-ம் தேதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT