இந்தியா

ஹரியாணாவில் முறைகேடாக நிலம் ஒதுக்கீடு: முன்னாள் முதல்வர் மீது சிபிஐ வழக்கு

செய்திப்பிரிவு

ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா என்ற இடத்தில் 3360 சதுர மீட்டர் நிலம் 1982-ல் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிலத்தை 1996-ல் அப்போதைய பன்சிலால் அரசு திரும்ப எடுத்துக் கொண்டது.

பின்னர் பூபிந்தர் சிங் ஹுடா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2005-ல் ஆட்சிக்கு வந்ததும் அந்த இடம் மீண்டும் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. அப்போது 1982-ல் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கே நிலம் ஒதுக்கப்பட்டது.

கடந்த 2014-ல் மனோகர் லால் கத்தார் தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றும் நில ஒதுக்கீடு விவகாரம் குறித்து மாநில ஊழல் கண்காணிப்புத் துறை விசாரணை நடத்தியது. அதன்பேரில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இதே விவகாரம் தொடர்பாக சிபிஐ சார்பில் பூபிந்தர் சிங் ஹுடா மீது நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கினார். அந்த நிறுவனத்தை சோனியா காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT