இந்தியா

லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பிகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பிகார் உயர் நீதிமன்றமும் அனுமதி மறுத்த நிலையில், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய பெஞ்ச், அம்மனு குறித்து பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நிலையில், லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 44 பேரில் 37 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டதன் அடிப்படையில் லாலுவையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT