அதிகார வெறி காரணமாக, மக்களின் தீர்ப்புக்கு நரேந்திர மோடி அரசு மதிப்பளிப்பதில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அருணாச்சலப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சோனியா, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு அதிகார ஆசை என விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாண்டெட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் சங்கர்ராவ் சவான் சிலை மற்றும் அவரது பெயரிலான நினைவு நூலகத்தை திறந்து வைத்து சோனியா காந்தி பேசியதாவது:
தற்போதைய மத்திய அரசு அதிகார வெறி காரணமாக, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்துள்ளது. இதன்மூலம் மக்களின் தீர்ப்புக்கு அவமரியாதை செய்துள்ளதுய
ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பையும் பாதுகாத்ததற்காக உச்ச நீதிமன்றம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மோடி அரசு கலைத்து, மக்களை அவமதித்து விட்டது. சங்கர்ராவ் இன்று இருந்திருந்தால் அரசியல் சாசனத்துக்கு முரணாண செயல்களைப் பார்த்து பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மோடி அரசு நீர்த்துப் போகச் செய்ததால் விவசாயிகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் பலவீனமடைந்துள்ளனர். மோடி அரசின் கொள்கைகளால் விவசாயிகள் மனமுடைந்து விட்டனர். நாடு வறட்சியில் சிக்கித் தவிப்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும். பெரு முதலாளிகளின் கோடிக்கணக்கான கடன்களைத் தள்ளுபடி செய்த மோடி அரசு, விவசாயிகளைப் புறக்கணித்து விட்டது. விவசாயிகளின் குரல் பலவீனமடைவதை காங்கிரஸ் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.