இந்தியா

தன்பாலின, இருபாலின உறவாளர்கள் மூன்றாம் பாலினத்தவர் அல்ல: உச்ச நீதிமன்றம் விளக்கம்

பிடிஐ

தன்பாலின உறவாளர்களும் (Lesbians, Gay), இருபாலின உறவாளர்களும் (பைசெக்ஸுவல்) மூன்றாம் பாலினத்தவர் அதாவது திருநங்கைகள் அல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடரபான தனது 2014-ம் ஆண்டு உத்தரவில் மாற்றம் செய்யவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து 2014- ஏப்ரல் 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வெளியிட்டது.

இந்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை எனக் கூறி, மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், திருநங்கைகள் அல்லது மூன்றாம் பாலினத்தவர் என்பது தொடர்பான தெளிவான வரையறை தேவை எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், “முந்தைய உத்தரவில் லெஸ்பியன்கள், கே, பைசெக்ஸுவல்ஸ் ஆகியோர் மூன்றாம் பாலினத்தவரா இல்லையா என்பது தெளிவாக இல்லை. இதுதொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, என்.வி. ரமணா ஆகியோரடங்கிய அமர்வு லெஸ்பியன்கள், கே, பைசெக்ஸுவல் ஆகியோர் மூன்றாம் பாலினத்தவர் அல்ல என்பது 2014 ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பிலேயே போதுமான அளவு தெளிவாக உள்ளது. மேலும் தெளிவுபடுத்தத் தேவையில்லை. மத்திய அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது” எனக் கூறினர்.

திருநங்கைகள் அனைவரையும் இதர பிற்படுத்தப்பட்டோராக கருத உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிலர் பிறப்பால் எஸ்.சி., எஸ்.டி. ஆக இருப்பதால் அனைவரையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளது.

SCROLL FOR NEXT