ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்று மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் கூறும்போது, "ராகுல் காந்தி ஏற்கிறாரோ இல்லையோ, கட்சியின் பிரதமர் வேட்பாளர் அவர்தான். அந்தப் பொறுப்பை ஏற்பார். இது எனது கருத்து.
காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து தெரிந்துகொள்ள வெள்ளிக்கிழமை வரை காத்திருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் கட்சியின் மூத்த தலைவர்களிடையே கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்" என்றார் ஆஸ்கர் பெர்னாண்டஸ்.
ராகுல் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் மூத்த தலைவரான ஆஸ்கர் பெர்னாண்டஸின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.