இந்தியா

பொய் சொல்கிறார் நரேந்திர மோடி: ஒமர் அப்துல்லா தாக்கு

செய்திப்பிரிவு

காஷ்மீரில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்று மோடி கூறியுள்ளது தவறானது என்று முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இது குறித்து ஒமர் அப்துல்லா டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது: “மோடி தனது வசதிக்காக என்னையும் எனது சகோதரியையும் உதாரணமாகக் கூறி ஆண் பெண் சமத்துவம் பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதில் சிறிதளவும் உண்மையில்லை.

ஒன்று அவருக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அவர் பொய் கூறியிருக்க வேண்டும்.

காஷ்மீருக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ள தாக மோடி கூறியிருக்கிறார். அதுவும் தவறான தகவல். இமாசலப் பிரதேசத்துக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் எல்லாம் இப்போது காஷ்மீருக்கு வர ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 14 லட்சம் பேர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த ஆண்டு இப்போது வரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமே 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் சுற்றுலா வந்துள்ளனர். பேசுவதற்கு முன்னால், தனது உரையில் இடம்பெற்றுள்ள தகவல்களை மோடி சரிபார்க்க வேண்டும்” என்று ஒமர் தெரிவித்துள்ளார்.

மோடியின் பேரணியில் 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர் என்ற பாஜக வெளியிட்ட தகவலையும் ஒமர் அப்துல்லா மறுத்துள்ளார். பேரணியைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற இடத்தின் படத்தை வெளியிட்ட ஒமர், மிகச் சிறிய அந்த மைதானத்தில் ஏராளமான இடம் காலியாக உள்ளது. அதில் எப்படி 45 ஆயிரம் பேர் பங்கேற்றிருக்க முடியும் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT