டெல்லி தமிழ் எழுச்சி இயக்கத்தின் சார்பில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கண்டனப்பேரணி நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் டெல்லிவாழ் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
டெல்லி மண்டி இல்லத்தில் ஆரம்பித்த இந்த கண்டனப்பேரணி, பாரகம்பா சாலை வழியாக ஜந்தர் மந்தரைச் சென்றடைந்தது. இந்நிகழ்வின்போது, செய்தியா ளர்களிடம் பேசிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆனந்தசெல்வம், "பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வரும் நிலையில் இந்தியா மட்டும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் வகையில் மவுனம் காப்பது வருத்தம் அளிக்கிறது" என தெரிவித்தார்.
மேலும், உலக நாடுகள் இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றதாக அறிவிப்பதோடு, சிறையில் வாடும் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த ஊர்வலத்தின் இறுதியில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களைக் கண்டறிய ’உலக போர்க்குற்ற தீர்ப்பாயம்’ அமைக்கக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினர்.