இலங்கையில் அடுத்த மாதம் காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்த திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு ,நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில் இந்தியா கலந்துக்கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு கடந்த 1ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருவதையும் எடுத்துரைத்தார்.
அப்போது கருணாநிதிக்கு, பிரதமர் கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில்: “காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும், தியாகு உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டிய நடவடிக்கைகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி தலையிட்டு எடுக்க வேண்டும்” எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.