ககோலி கோஷ் தஸ்திதார் | கோப்புப் படம்
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனை அக்கட்சியின் எம்.பி ககோலி கோஷ் தஸ்திதார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியை வீழ்த்தி பாஜக முதல் முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக சார்பில் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.
மம்தாவின் தோல்வியை தொடர்ந்து அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் தீவிரம் அடைந்துள்ளது. கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமார் 60 பேர் ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் அணி திரண்டனர். இதையடுத்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரிதப்ரதா பானர்ஜி கைப்பற்றியது மம்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திரிணமூல் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தங்கள் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தனர். சிலர் கட்சியிலிருந்து வெளியேறினர். கவுன்சிலர்கள், கொல்கத்தா மேயரும் ராஜினாமா செய்தனர்.
திரிணமூல் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தற்போது மேற்கு வங்கத்தை தாண்டி நாடாளுமன்றத்துக்குள்ளும் பரவியுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் 20 பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து அக்கட்சியின் எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நான் உட்பட சுமார் 20 டிஎம்சி எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் முடிவை நாங்கள் எடுத்திருப்பதை தெரிவித்துள்ளோம். மேற்கு வங்கத்தில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் எதிர்கால அரசியல் பாதை என்டிஏ உடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறாம்” என்று தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பசிர்ஹாட் எம்பி ஹாஜி நூருல் இஸ்லாம் மறைவை அடுத்து அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளதால், தற்போது கட்சிக்கு 28 மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பங்குக்கும் குறையாத எண்ணிக்கையிலான எம்பிக்கள் தனி அணியாக செயல்பட முடியும். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய முடியாது. எனவே, இவர்கள் தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளனர்.