புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 20 பேர், திரிபுராவைச் சேர்ந்த தேசியவாத சிட்டிசன்ஸ் கட்சியில் இணைய உள்ளனர்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மம்தா பானர்ஜியின் மருமகனும் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜியின் சர்வா திகார போக்கால்தான் தேர்தலில் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகள் பலர் குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் தனி அணியாக பிரிந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றனர். இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 20 மக்களவை எம்.பி.க்கள் தனி அணியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்களை அங்கீகரிக்க வேண்டாம் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி தூக்கிய 20 எம்.பி.க்கள் ககோலி கோஷ் தாஸ்திதர் தலைமையில் சபாநாயகரை சந்தித்து தனி அணியாக மக்களவையில் அமர கடிதம் அளித்தனர். இவர்கள் திரிபுராவைச் சேர்ந்த தேசியவாத சிட்டிசன்ஸ் கட்சியில் இணைந்து தே.ஜ. கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் 3-ல் 2 பங்கு எம்.பி.க்கள் பிரிந்துள்ளதால் அடுத்த மாதம் தங்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி அந்தஸ்தை வழங்க நீதிமன்றத்தில் மனு செய்யவுள்ளதாக எம்.பி. சுதீப் பந்தோபத்யாய் தெரிவித்துள்ளார்.