கோப்புப்படம்
போபால்: மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டம், பத்நகர் தாலுகா, ஜலாரியா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பாகீரத் என்ற 2 வயது சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். சிறுவனை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தண்ணீர் நிரம்பிய ஆழ்துளைக் கிணற்றில் 75 அடி ஆழத்தில் சிறுவன் இருப்பதை மீட்புக் குழுவினர் கண்டறிந்தனர். நிலத்தில் பாறைகள் இருந்ததால் ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக சுரங்கம் தோண்டும் பணி வெற்றி பெறவில்லை. சிறுவனின் கைகளில் ஒரு மீட்பு வளையத்தை மாட்டி, அவனை மேலே இழுப்பதற்கான முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இறுதியில் சிறுவனை சடலமாகத்தான் மீட்க முடிந்தது" என்றனர்.
இந்த அலட்சியத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுவன் உயிரிழப்புக்கு ம.பி. முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். சிறுவனின் பெற்றோருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.