இந்தியா

சஹரான்பூர் கலவரம்: 24 பேர் கைது; கொலையானவர் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

ஐஏஎன்எஸ்

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமான வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

கலவரத்தில் கொல்லப்பட்ட ஆசிஷ் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

சஹரான்பூரில் கடந்த மூன்று மாதங்களாகவே தலித்துகளுக்கும் ராஜ்புட் சமூகத்தினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சஹரான்பூர் பகுதியில் உள்ள சந்திரபுரா பகுதிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி வந்தார். ஏற்கெனவே நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் வீட்டுக்குச் சென்று அவர் ஆறுதல் கூறினார்.

மாயாவதி வந்து சென்றதைத் தொடர்ந்து அங்கு மீண்டும் இரு பிரிவனருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

கலவரத்தில் ஆசிஷ் என்பவர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், இது தொடர்பாக 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கை குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.துபே கூறும்போது, "இப்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. நேற்று நடந்த கொலை தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

கடந்த 3 மாதங்களாகவே வன்முறை பகுதியாக இருக்கும் சஹரான்பூருக்கு மாநில அரசு கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT