தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு முதல் தொடர் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஆந்திர மாநிலத்தை மிரட்டிய ‘லெஹர்’ புயல், திடீரென வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வியாழக்கிழமை பிற்பகல் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இது, தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக தெலங்கானா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வலுவிழந்துவிடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (30-ம் தேதி) இரவு முதல் தொடர் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
கடந்த அக்டோபர் 21-ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவ மழையும் ஏமாற்றிவிட்டது. இதுவரை தமிழகத்துக்கு போதிய மழை கிடைக்கவில்லை. வெள்ளிக்கிழமை வரை சராசரி அளவைவிட 38 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. ஆனால், இன்று இரவு தொடங்கும் மழை கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் மழை பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.