இந்தியா

போபால் விஷவாயு கசிவின் முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் காலமானார்

செய்திப்பிரிவு

போபால் விஷவாயு கசிவு வழக்கில் இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியான வாரன் ஆண்டர்சன் காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே புளோரிடா மாகாணத்தில் உள்ள வோரா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்ற அவர் உயிரிழந்துவிட்டார்.

இருப்பினும் அவரது குடும்பத்தார் ஆண்டர்சன் மரணம் குறித்து அறிவிப்பு எதும் வெளியிடவில்லை. பொது ஆவணங்களின் அடிப்படையில் அவரது மரணம் உறுதி செய்யபப்ட்டுள்ளதாக அமெரிக்க நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.

1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையிலிருந்து விஷ வாயு வெளியேறியது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்.

இந்த சம்பவம் நடந்து மூன்று நாள்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் த்லைவர் ஆண்டர்சனை மத்தியப் பிரதேச போலீஸ் கைது செய்தது.

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராவதாகவும் கூறிச் சென்ற ஆண்டர்சன் பின்னர் இந்தியாவுக்கு வரவேயில்லை.

இதையடுத்து விஷவாயு கசிவு தொடர்பான விசாரணைக்கு அவரை அழைத்து வர இந்தியா கடும் முயற்சி செய்தது. ஆனால் ஆண்டர்சனை அனுப்ப அமெரிக்க மறுத்ததால் இந்தியாவின் முயற்சி நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT