இந்தியா

ஜெயலலிதா பிரதமரானால் மகிழ்ச்சி: தேவகவுடா

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் எனக்கு மகிழ்ச்சி என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள நிறுவனருமான தேவகவுடா தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற “காமராஜர் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா” என்ற அமைப்பின் 37-வது ஆண்டு தேசிய மாநாடு தொடக்க விழாவை தொடங்கி வைக்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தென்மாநிலத்தைச் சேர்ந்தவர் நாட்டின் பிரதமராக வருவதை ஆதரிக்கிறேன். குறிப்பாக, ஜெயலலிதா பிரதமரானால் எனக்கு மகிழ்ச்சி.

காங்கிரஸ் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் என்பதை 4 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அந்த இரு கட்சிகளும் மனதில் வைத்து ஆட்சி புரிய வேண்டும்.

மாநிலக் கட்சிகளின் பலத்தை வைத்து அல்லாமல், காங்கிரஸ், பாஜக கொள்கைகளுக்கு மாற்றாக நல்ல கொள்கை, செயல் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கூட்டணி அமைந்தால், மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறலாம். அதற்கான முயற்சி களை நான் மேற்கொள்ளவில்லை. அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட முலாயம் சிங் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வர்” என்றார் தேவகவுடா.

SCROLL FOR NEXT