மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது முக்கிய அரசியல் தலைவர்களின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பொம்மை விமானம், ஹெலிகாப்டர்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உத்தரப் பிரதேச உளவுத் துறை போலீஸார் எச்சரித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலின்போது பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோரை கடத்திச் செல்ல இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.
அதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதி களை டெல்லி போலீஸார் அடுத்தடுத்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை யில் தேசிய தலைவர்களை தாக்கத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம், பிஹார் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப் பட்டு அந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
புதிய தாக்குதல் திட்டம்
இந்நிலையில் உத்தரப் பிரதேச உளவுப் பிரிவு போலீஸார் புதிதாக ஓர் அதிர்ச்சி தகவலை இப்போது வெளியிட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கக்கூடும் என்பதால் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அந்த மாநிலத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இவர்களில் தேசியத் தலைவர்களான நரேந்திர மோடி (வாரணாசி), ராஜ்நாத் சிங் (லக்னோ), ராகுல் காந்தி (அமேதி), சோனியா காந்தி (ரே பரேலி) ஆகியோர் உத்தரப் பிரதேசத்தில் நேரடியாக களத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் தங்களது தொகுதிகள் உள்பட மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானங்கள், ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மாநிலத்தின் அனைத்து மாவட்ட போலீஸாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய நகரங்களில் பொம்மை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் கடைகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் யார் யாரெல்லாம் ரிமோட் கன்ட்ரோல் பொம்மைகளை வாங்கிச் சென்றார்கள் என்பது குறித்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொம்மை விமானங்கள் தவிர ‘ஏர் பலூன்கள்’ மூலமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுப் பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.