இந்தியா

சிபிஐ குற்றச்சாட்டுகள்: விஜய் மல்லையா அதிர்ச்சி

பிடிஐ

ரூ.720 கோடி பெறுமான ஐடிபிஐ வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு ஜாமினில் வெளிவராத வாரண்ட் பிறப்பித்ததையடுத்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் விஜய் மல்லையா.

மேலும், நடப்பு மத்திய பட்ஜெட்டில் கடன் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடி விடாதமுடியாபடி சட்டமியற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து மல்லையா தனது நிலையை வர்ணிக்கையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆடும் கால்பந்தில் தான் பந்தாக்கப்பட்டு உதைபடுவதாக தெரிவித்துள்ளார்.

“ஊடகங்கள்தான் மைதானம், நான் கால்பந்து, இரண்டு போட்டி மனப்பான்மை நிறைந்த அணிகளான யுபிஏ, என்டிஏ விளையாடுகின்றன” என்று மல்லையா ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்குத் தலைமறைவாகி விடும் தொழிலதிபர்கள், மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த சொத்துகள் முடக்கம் முதல் அவர்கள் அயல்நாட்டுக்கு தப்பிச் செல்லாதவாறு செய்ய சட்டம் ஆகிய கெடுபிடிகளை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

இந்நிலையில் சிபிஐ குறித்து மல்லையா கூறும்போது, “சிபிஐ குற்றச்சாட்டுகள் குறித்து அதிர்ச்சியாக உள்ளது. அனைத்தும் தவறானவை. உயர்மட்ட போலீஸ் குழுவுக்கு வணிகம் பற்றியும் பொருளாதாரம் பற்றியும் என்ன தெரியும்?” என்று சாடியுள்ளார்.

மார்ச் 2ம் தேதி இந்தியாவை விட்டுப் பறந்த மல்லையா வங்கிகளிடமிருந்து கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொகை ரூ.9,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விசாரணை குழுக்கள் முடக்கிய சொத்துக்களின் மதிப்பு ரூ.8041 கோடி. அமலாக்கப் பிரிவினால் முடக்கப்பட்ட அதிகபட்ச சொத்துகளாகும் இது.

SCROLL FOR NEXT