இந்தியா

பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) லாரன்ஸ் பள்ளியின் 159-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உதகை வருகிறார். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து கோவை வரும் பிரணாப் முகர்ஜி, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு நண்பகலில் உதகை வருகிறார். ஒரு மணி நேரம் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இன்று இரவு உதகையில் உள்ள ராஜ்பவனில் பிரணாப் முகர்ஜி தங்குகிறார்.

புதன்கிழமை உதகை தாவரவியல் பூங்காவை பிரணாப் பார்வையிடுகிறார். பின்னர் கோவை விமான நிலையம் திரும்பும் அவர் அங்கியிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்கிறார்.

பிரணாப்பின் வருகையையொட்டி, தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து விழா நடைபெறும் பள்ளி வளாகம் வரை சுமார் 1,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இரண்டாவது நாள் பயணத்தில் காஞ்சிபுரம் வருவதாக இருந்த குடியரசுத் தலைவரின் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் அந்த நேரத்தில் சில வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளதால் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

SCROLL FOR NEXT