இந்தியா

நொய்டாவில் 23 வயது இளம்பெண் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

23 வயது இந்திய பெண்பொறியாளர் ஒருவர் புதன்கிழமை காலையில் நொய்டாவில் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் நொய்டாவின் 62-வது செக்டாரில் உள்ள சதாப்தி ரயில் விஹார் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் பொறியாளர், ஹரியானாவைச் சேர்ந்த ஜகாத்ரி பகுதியைச் சேர்ந்த அஞ்சலி ரத்தோர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு

அஞ்சலியின் ஆண் நண்பர் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீஸார் அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அஞ்சலியின் பெற்றோர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.

அஞ்சலி நொய்டாவில் லாவா இண்டர்நேஷனல் லிமிட்டட் என்னும் மொபைல் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாகப் பயிற்சி பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

மோசமான தரத்தில் சிசிடிவி ஆதாரம்

கொலை சம்பவம் குறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''புதன்கிழமை காலை 6.34 மணிக்கு குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கிருந்த லிஃப்டின் அருகே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது. ஆனால் காட்சிகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளதால், கொலை செய்த நபரின் முகம் தெளிவாகத் தெரியவில்லை'' என்றனர்.

SCROLL FOR NEXT