திருமலை திருப்பதி தேவஸ்தான மொபைல் செயலி வரும் தெலுங்கு வருடப்பிறப்பு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
இதன்மூலம் திருமலையில் தங்கும் அறைகளின் நிலவரம், தரிசன நேரம், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விவரம் போன்றவற்றை பக்தர்கள் அறிய முடியும். மேலும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளையும், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்ய முடியும். எனவே இந்த செயலி பக்தர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த செயலிக்கு பக்தர்களே சிறந்த பெயரை தேர்வு செய்து சூட்ட வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்து அதற்கான வாட்ஸ் ஆப் எண்ணையும் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த செயலிக்கான பெயரை தேவஸ்தானத்தின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் ‘செவன் ஹில்ஸ்’, வெங்கடேஸ்வரா, நமோ வெங்கடேசாயா, பாலாஜி என்ற பெயர்களைத் தேர்வு செய்துள்ளனர். இதில் ஏதேனும் ஒரு பெயரை தேவஸ்தானம் தேர்வு செய்து அறிவிக்கும் என கூறப்படுகிறது.