இந்தியா

மணிப்பூர் இளைஞர்கள் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கைக்கு ராஜ்நாத் உறுதி

செய்திப்பிரிவு

பெங்களூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்களை ஒரு கும்பல் கன்னடம் பேசச் சொல்லி வற்புறுத்தியது.

தங்களுக்கு கன்னடம் தெரியாது எனக் கூறிய மாணவர்கள் மீது அக்கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பெங்களூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பேசவுள்ளேன். ஜாதி, மதம், ஏனைய பிரிவுகளால் யாரும் யாரையும் பாகுபாடுடன் நடத்த முடியாது" என்றார்.

வடகிழக்கு மாநிலமான ம‌ணிப்பூரைச் சேர்ந்தவர் டி.மைக்கேல் லாம்ஜதாங் ஹோகிப் (26). இவர் அங்குள்ள தடொ என்ற பழங்குடியின மாணவர் சங்கத்தின் தலைவராக உள்ளார். மைக்கேல் தனது நண்பர்கள் கம்கோலன் (28), ராக்கி கிப்கேன் (25) ஆகியோருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரில் உள்ள கொத்தனூ ருக்குச் சென்றுள்ளார். அங்குள்ள‌ சாலையோர உணவகத்தில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது குடிபோதையில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், மைக்கேலிடம் கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர் தனக்கு கன்னடம் தெரியாது என இந்தியில் பதிலளித்துள்ளார். ‘கன்னடம் தெரியாமல் எதற்காக கர்நாடகத்தில் இருக்கிறாய்? சீனாவுக்கு போக வேண்டியது தானே?' என கோபமாக கேட்டுள்ளனர். 'நாங்கள் மணிப்பூரைச் சேர்ந்த‌வர்கள்' எனக் கூறிவிட்டு மைக்கேல் மற்றும் அவரின் நண்பர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இருப்பினும் அவர்களை துரத்திச் சென்ற கும்பல், “உங்களுக்கு கன்னடம் தெரியாது. ஆனால் கன்னட மக்கள் தயாரித்த உணவை மட்டும் சாப்பிட தெரியுமா? போய் சீனாவிலே சாப்பிடுங்கள்” எனக் கூறி சரமாரியாக கற்களாலும், இரும்பு கம்பியாலும் தாக்கியுள்ளனர். பலத்த ரத்தக் காயங்களுடன் மைக்கேல் ஓடியபோதும், இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். இதற்கிடையே மைக்கேலின் நண்பர்களில் ஒருவர் அருகில் இருந்த கொத்தனூர் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துள்ளார். போலீஸாரை பார்த்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

SCROLL FOR NEXT