இந்தியா

பி.எஃப். வட்டி 8.75% ஆக உயர்கிறது

செய்திப்பிரிவு

2013-14ம் நிதியாண்டுக்கு வருங் கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ) முடிவு செய்துள்ளது. இதனால் சுமார் 5 கோடி பேர் பலனடைவார்கள்.

இ.பி.எஃப்.ஓ. அறங்காவலர் கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் நிருபர்களிடம் கூறுகையில், “2013 14ம் ஆண்டுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.75 சதவீதமாக உயர்த்தி வழங்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம்” என்றார்.

2012- 13ம் நிதியாண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில், இ.பி.எஃப்.ஓ.விடம் உபரி நிதி இருப்ப தால், தற்போது 0.25 சதவீதம் உயர்த்த முன் வந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் வரும் மக்களவை தேர்தலையொட்டி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இ.பி.எஃப்.ஓ.வின் பரிந்துரைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன் சந்தாதாரர்களின் கணக்கில் புதிய விகிதத்தில் வட்டி வரவு வைக்கப்படும்.

SCROLL FOR NEXT