உலக கோடீஸ்வரர்கள் வரிசையில்பில்கேட்ஸும் இந்திய கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானியும் முதலிடத்தில் உள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த சர்வதேச ஆய்வு நிறுவனமான ஹூருன், உலக பணக்காரர்களின் பட்டிலை வெளியிட்டுள்ளது. 68 நாடுகளைச் சேர்ந்த 1867 பெரும் கோடீஸ்வரர்களை அவர்களின் சொத்து மதிப்புக்கு ஏற்ப அந்த நிறுவனம் வரிசைப்படுத்தியுள்ளது.
இதில் ரூ.4,08,000 கோடி சொத்து மதிப்புடன் அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதே நாட்டைச் சேர்ந்த வாரன் பப்பட் ரூ.3,84,000 கோடிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஸ்பெயினை சேர்ந்த அமோன்சியோ ஓர்டிகா ரூ.3,72,000 கோடிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி சர்வதேச அளவில் 41-வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1,08,000 கோடியாகும். இதன்படி இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த இந்தியரான லட்சுமி மிட்டல் ரூ.1,02,000 கோடி சொத்து மதிப்புடன் சர்வதேச அளவில் 49-வது இடத்தில் உள்ளார். சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் அதிபர் திலிப் சிங்வி, விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி ஆகியோர் தலா ரூ.81,000 கோடி சொத்து மதிப்புடன் 77-வது இடத்தில் உள்ளனர். டாடா சன்ஸ் நிறுவனத்தின் பல்லோன்ஜி மிஸ்திரி ரூ.72,000 கோடி சொத்து மதிப்புடன் 93-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 70 பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களைவிட அதிகமாகும். உலகில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 481 கோடீஸ்வரர்களும், சீனாவில் 358 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.
பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் 6 நகரங்களில் மும்பையும் இடம் பிடித்துள்ளது. அங்கு 33 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
சர்வதேச அளவில் 9 கோடீஸ்வரர்களில் ஒருவர் பெண்ணாக உள்ளார். இந்த ஆண்டு 482 புதுமுகங்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர்.