இந்தியா

உத்தர பிரதேசத்தில் பாஜக பிரமுகர் சுட்டுக் கொலை

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீபாவளி நாளன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் தனது வீட்டு வாசலிலேயே துப்பாக் கியால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

டெல்லியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள புலந்தஷெஹரில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்தவர் ராஜ்குமார் (38). இவர் பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தார். நகரின் சிவ்புரி பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் சம்பவ தினத்தன்று இரவு ஸ்கூட்டியில் வந்த மூன்று பேர் துப்பாக்கியால் ராஜ் குமாரை சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து, புலந்தஷெஹர் மாவட்டக் காவல் துறை தலைமை கண்காணிப்பாளர் அகிலேஷ் குமார் கூறும்போது, “லட்சக்கணக்கான ரூபாயை வட்டிக்கு கடன் வழங்கி உள்ளார் ராஜ்குமார். இதுதவிர ரியல் எஸ்டேட் மாபியாக்களிடமிருந்தும் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது” என்றார்.

கடந்த ஜூன் மாதம் இதே நகரில்தான் பாஜக நிர்வாகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு பின் அருகிலுள்ள தாத்ரி எனும் இடத்திலும் ஒரு பாஜக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டார்.

மேலும் இரு சம்பவங்கள்

புலந்த்ஷெஹரிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சம்பல் நகரிலும் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஏட்டா எனும் இடத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT