டென்மார்க்கைச் சேர்ந்த 52 வயது பெண் 2014-ம் ஆண்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, டென்மார்க்கிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 52 வயது பெண்ணை 5 பேர் சேர்ந்து கத்தி முனையில் மிரட்டிக் கடத்தி, கூட்டு பலாத்காரம் செய்து, அவரிடமிருந்த பொருட்களைப் பறித்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் குமார், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும், சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்துள்ளனர். அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
குற்றவாளிகள் மகேந்திரா (எ) கஞ்சா(27), ராஜா (23), ராஜு (24), ராஜு சக்கா (23), அர்ஜுன் (22) ஆகிய ஐந்து பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்த 5 பேர் தவிர, ஷ்யாம் லால் என்ற 56 வயது நபர் மீதும் இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. அவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர், ஷ்யாம் லாலின் ஆண்மைத் தன்மை குறித்து மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி யிருந்தார். ஆனால், அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
எனினும், வழக்கு விசாரணைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. எனவே, ஐவரும் குற்றவாளிகள் என்ற தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். இவ்வழக்கில் மேலும் மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சிறார்கள் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
தண்டனை விவரம் குறித்த விவாதம் வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.