இந்தியா

மதவாத சக்திகளை விரட்டுவதே என் வேலை: லாலு ஆவேசம்

செய்திப்பிரிவு

மதவாத சக்திகளை களையெடுப்பதே இனி என் வேலை என்று ஜாமீனில் விடுதலையான ராஷ்ட்ரீய ஜனாத தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட லாலு, ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையிலிருந்து இரண்டரை மாதத்துக்கு பிறகு நேற்று ஜாமீனில் விடுதலையானார். சிறையின் முக்கிய வாயில் வழியே வெளியே வந்த லாலு, சிறை வளாகத்தில் இருந்த பழங்குடியின தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்தார். லாலு விடுதலையை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் சிறைக்கு வெளியே கூடியிருந்தனர். அவர்கள் லாலுவை வாழ்த்தி முழக்கமிட்டனர். பின்னர் அங்கு கூடியிருந்த நிருபர்களிடம் லாலு கூறியதாவது:

டெல்லியில் வலுவாக காலூன்ற மதவாத சக்திகள் முயற்கின்றன. அவர்களை விரட்டியடிப்பதற்காக நான் வந்துவிட்டேன். நரேந்திர மோடியோ, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ தங்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இடம்தரமாட்டோம். அஸ்தினாபூரில் இருந்து மதவாத சக்திகள் வெளியேற்றப்படுவார்கள். மத சார்பற்ற சக்திகளை வலுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்யப் போகிறேன் என்றார் லாலு.

இதைத் தொடர்ந்து அவர் ராஞ்சியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தியோரி கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். கோயில் அருகில் அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே லாலு பேசுகையில், "நான் சிறைக்கு சென்றவுடன் எனது கதை முடிந்துவிட்டதாக சிலர் நினைத்தார்கள்.

சமோசாவில் ஆலு (உருளைக்கிழங்கு) இருக்கும் வரை பீகாரில் இந்த லாலு இருப்பான் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். நரேந்திர மோடிக்கு பின்னால் தொழிலபதிபர்கள் உள்ளனர். மதவாத சக்திகளிடம் இருந்து மக்கள் விலகியிருக்க வேண்டும்.

வரும் தேர்தலில் பீகாரில் பாஜகவுக்கும், அதன் கூட்டணியில் இருந்து பிரிந்த சென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

வழக்கு பின்னணி

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து கடந்த அக்டோபர் 4ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து லாலு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை ராஞ்சி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதில் லாலுவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து ஜாமீன் நடைமுறைகள் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று முடிந்த பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT