இந்தியா

அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை கைது செய்ய 22-ம் தேதி வரை தடை: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏஎன்ஐ

அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, அவரது குடும்பத்தினரை 22-ம் தேதி வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலங்களவை அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா. டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் கன்னத்தில் சசிகலா புஷ்பா அறைந்ததாக செய்திகள் வெளியாயின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தியதாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார். கடந்த 1-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, மாநிலங்களவையில் பேசுகையில் ஜெயலலிதா மீது பரபரப்பாக புகார் தெரிவித்தார். அத்துடன் தனக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்நிலையில், சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்து வந்த பெண் தூத்துக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி உள்ளார். அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் புகாரும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேரை 22-ம் தேதி வரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க கூடாது என்று நேற்று உத்தரவிட்டது.

‘‘சசிகலா புஷ்பா உட்பட 3 பேரும் முன்ஜாமீன் போன்ற நிவாரணம் பெற சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

          
SCROLL FOR NEXT