நாடாளுமன்றத்தை வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கிய ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மான் மீது, பத்திரிகையாளர்களை அவமதித்தாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் சங்ருர் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பகவந்த் மான். ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யான இவர், சமீபத்தில் நாடாளு மன்ற நடவடிக்கைகளை வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கினார். இதுகுறித்து விசாரணை நடத்த, மக்களவை சபாநாயகர் குழு அமைத் துள்ளார். மேலும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பகவந்த் மானுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பதேகர் சாஹிப் மாவட்டம் பாஸி பதானா என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை ஆம் ஆத்மி சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பகவந்த் மான், அங்கிருந்த பத்திரிகை யாளர்களை அவமதித்தாக பஞ்சாப் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பகவந்த் மீது நேற்று பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்தனர்.
இதுகுறித்து பதேகர் சாஹிப் எஸ்எஸ்பி புல்லார் நேற்று கூறும்போது, ‘‘பத்திரிகையாளர்கள் அளித்த புகாரை விசாரித்து அறிக்கை அளிக்கும்படி டிஎஸ்பி.க்கு உத்தரவிட்டிருந்தேன். அவர் அளித்த அறிக்கையின்படியும், சட்ட நிபுணர்களின் கருத்துகளை கேட்ட பிறகும் எம்.பி. பகவந்த் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
பகவந்த் மீது, 109,153, 323, 341, 352, 355, 356, 427, 500, 504 மற்றும் 149 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் ரன்ஜோத் சிங் போலீஸில் அளித்த புகாரில், ‘‘கூட்டத்துக்கு பகவந்த் 4 மணி நேரம் தாமதமாக வந்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்களை விரட்டும்படி தொண்டர்களிடம் கூறினார். இதனால் பத்திரிகையாளர்களை ஆம் ஆத்மி தொண்டர்கள் தள்ளிவிட்டனர். இதில் ஒருவருடைய கேமரா உடைந்துவிட்டது. அத்துடன் பகவந்த் எங்களை தரக்குறைவாக பேசினார். ‘பண ஊடகம்’ என்று இழிவாக பேசினார். இது எங்கள் மனதை புண்படுத்திவிட்டது’’ என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு பகவந்த் மானின் உருவ பொம்மையை காங்கிரஸ் தொண்டர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.