பிஹார் தலைநகர் பாட்னாவில் எண் 10, சர்குலர் சாலையில் முன்னாள் முதல்வரும் லாலுவின் மனைவியுமான ரப்ரி தேவியின் வீடு உள்ளது. அந்த வீட்டில் லாலுவின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றன.
குடும்பத்தினர் முன்னிலையில் நள்ளிரவில் 70 பவுண்ட் எடை கொண்ட பிரம்மாண்ட ராட்சத கேக்கை லாலு வெட்டி மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகளுக்கு ஊட்டினார். அதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேரில் சென்று லாலுவுக்கு வாழ்த்து கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியபோது, பிஹார் அரசியல், சமுதாயத்துக்கு லாலுவின் பங்களிப்பு அதிகம் என்று புகழாரம் சூட்டினார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் லாலுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து லாலு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் மகா கூட்டணிக்கு தயாராகுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2015-ல் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. அதேபாணியில் மத்தியில் மெகா கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம் என்று லாலு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.