இந்தியா

ஜேஎன்யூ மாணவர் காலீத்துக்கு தீவிரவாத தொடர்பில்லை: அரசு தரப்பு புதிய விளக்கம்

செய்திப்பிரிவு

ஜேஎன்யூ மாணவர் காலீத்துக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக சில தொலைக்காட்சிகளில் வெளியான தகவலை அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட தீவிரவாதி அப்சல் குருவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் நடந்தது. அப்போது மாணவர்களில் ஒரு பிரிவினர், இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.

அப்சல் குருவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்களில் ஒருவரான காலீத்துக்கும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதை உளவுத் துறை உறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. காலீது பலமுறை பாகிஸ்தான் சென்றுவந்ததாகவும். ஜே.என்.யூ.வில் போராட்டங்கள் நடத்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பிடம் ஆதரவு திரட்டி வந்தததாகவும் கூறப்பட்டது.

இத்தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. தி இந்து (ஆங்கில நாளிதழுக்கு) உளவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "இப்படிப்பட்ட தகவலை நாங்கள் வெளியிடவில்லை. உளவுத் துறை அதிகாரிகள் யாரும் வெளிப்படையாக விளக்கமோ, மறுப்போ தரமாட்டார்கள் என்பதற்காக இத்தகைய தகவல்கள் எளிதாக பரவிவிடுகின்றன" என்றார்.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரும், ஜேஎன்யூ மாணவர் காலீத்துக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக தகவல் இல்லை என்றார்.

SCROLL FOR NEXT