ஹுத்ஹுத் புயல் ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் கரையை கடந்துள்ள நிலையில், மாநிலத்தின் நிலவரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.
இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறுகையில், "ஹுத்ஹுத் புயல் மிக தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தேன். புயல் கரை கடந்துள்ள நிலையில் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன என்பதையும் கூறினேன். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
ஹுத்ஹுத் புயலுக்கு ஆந்திராவில் 3 பேர் பலியாகியிருப்பதாகவும், நாகவள்ளி ஆற்றில் சிக்கிய 6 பேரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.