இந்தியா

மத்திய உள்துறை அமைச்சக இணையதளம் ‘ஹேக்கிங்’?

செய்திப்பிரிவு

மத்திய உள்துறை அமைச்சக இணையதளம் ‘ஹேக்கிங்’ செய் யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனை மறுத்துள்ள அமைச்சக வட்டாரங்கள், தொழில்நுட்ப பராமரிப்புக்காக இணையதளம் தற்காலிகமாக செயல்படவில்லை என்று விளக்கமளித்துள்ளன.

கடந்த மாதம் தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி.) இணையதளம் பாகிஸ்தானில் இருந்து ‘ஹேக்கிங்’ செய்யப்பட்டது. அந்த இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் இந்தியாவுக்கு எதிராகவும் வாசகங்கள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுகளின் இணையதளங்கள் ‘ஹேக்கிங்’ செய்யப்பட்டிருப்பதாகவும் இவை தொடர்பான சைபர் குற்ற வழக்குகளில் 8348 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் நேற்று மர்ம நபர்களால் ‘ஹேக்கிங்’ செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த இணையதளத்தை தேசிய தகவல்தொழில்நுட்ப மையம் முடக்கியது. இணையதளத்தை மீட்க வல்லுநர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் ‘ஹேக்கிங்’ தகவலை அமைச்சக வட்டாரங்கள் மறுத்துள்ளன. தொழில்நுட்ப பராமரிப்புக்காக இணையதளம் தற்காலிகமாக செயல்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

SCROLL FOR NEXT