இந்தியா

கேஜ்ரிவால் தர்ணா: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்திய தர்ணாவுக்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கில் மத்திய அரசுக்கும், டெல்லி மாநில அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லி மாநில அரசின் உத்தரவை ஏற்று செயல்பட மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் கட்டுப்பாட்டை மாநில அரசின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்த்து முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை மூத்த வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, என்.ராஜாராமன் ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பு பதவிகளை வகுக்கும் நபர்கள் சட்டத்துக்குப் புறம்பாக போராட்டம் நடத்தலாம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT