திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செவ்வாய்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஏக்கரில் பரப்பளவில் இருந்த மரங்கள் தீயில் கருகின. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களும் அடங்கும். திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில், திங்கள்கிழமை வெதுரு குப்பம், கார்வேட்டி நகரம் மண்டலங்களில் 9 குடிசைகள், 25 ஆடுகள் தீயில் கருகின.
இந்நிலையில், செவ்வாய் கிழமை திருமலை பகுதியில் பார்வேட்டி மண்டபம் மற்றும் பாபவிநாசம் ஆகிய பகுதிகளில் மதியம் 3.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அனல் காற்று வீசியதால் தீ வேகமாக பரவியது. இதனால் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முடியாமல் தவித்தனர்.
இதற்குள் தீ ஏராளமான மரங்களை சாம்பலாக்கியது. பல கோடி மதிப்புள்ள செம்மரங்களும் தீயில் கருகின. இந்த தீ விபத்தில் வன விலங்குகள், பறவைகளும் பலவும் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.சமீபத்தில், செம்மர கடத்தல் கும்பலை கட்டுப்படுத்தியதால், அவர்கள் செம்மரங்களுக்கு தீ வைத்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தீ தானாக ஏற்பட்டதா? நடந்து செல்லும் பக்தர்கள் யாராவது, சிகெரெட், பீடி போன்றவற்றை அணைக்காமல் வீசியதால் தீ விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.