டெல்லி முதல்வராக வரும் சனிக்கிழமை பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 2-வது நாளாக இன்றும் மக்கள் மன்றத்தை கூட்டினார்.
டெல்லி கவுசாம்பியில் உள்ள அவரது வீட்டில், மக்கள் மன்றம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள், மாணவர்கள், இன்ஜினியர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பலரும், தண்ணீர், மின்சாரப் பிரச்சினையை முன்வைத்தனர். சிலர், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி போலீஸ் பாதுகாப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். இலவச சட்ட சேவைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் ஆம் ஆத்மி தொண்டர்கள் பலர் மக்கள் மன்றத்தில் கலந்து கொண்டனர்.
அர்விந்த் கெஜ்ரிவால் பேசுகையில்: "உங்கள் அனைவரது புகார்களையும், ஆலோசனைகளையும் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பேன், அனைவரும் ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.