மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் இருந்து சிக்கிம் மாநிலத்தை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தொண்டர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 22-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 12-ம் தேதி முதல் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பு காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு மருந்துக் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17-ம் தேதி பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், ஜிஜேஎம் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் டார்ஜிலிங்கில் பல்வேறு இடங்களில் ஜிஜேஎம் தொண்டர்கள் பேரணி நடத்தினர். அப்போது கலிம்பாங்க் மாவட்டத் தில் போலீஸ் உட்பட அரசுத் துறை களுக்குச் சொந்தமான 4 வாகனங் கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று டார்ஜிலிங் மாவட்டம் செவோக்-கில் இருந்து சிக்கிம் மாநிலத்தின் கேங்டோக் பகுதியை இணைக்கும் 92 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை (என்.ஹெச் 31ஏ) மறித்து ஜிஜேஎம் தொண்டர்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடுமையாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிக்கிம் மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வாகனங்களுக்குப் பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் டார்ஜிலிங் மலைப்பகுதியில் நேற்று நிலைமை சற்று சீரடைந்தது. அதேநேரம் இன்டர்நெட் சேவை நேற்று முன்தினம் காலை முதல் தற்காலிகமாக துண்டிக்கப்பட் டுள்ளது. சமூக வலைதளங்களில் தேவையற்ற பதற்றத்தை ஏற் படுத்தும் கருத்துக்கள் பரவு வதைத் தடுக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டார்ஜிலிங்கில் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது. காலை யில் இருந்து எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. எந்தச்சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக உள்ளோம்’ என்றார்.
டார்ஜிலிங் நிலவரம் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வரும் 22-ம் தேதி சிலிகுரியில் நடக்கிறது. இதில் மம்தா கலந்துகொள்ள மாட்டார். ஏனென்றால் வரும் 23-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை தின விழா நெதர்லாந்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்க செல்வதற்காக விமான நிலையம் வந்த மம்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாக அமையாது. பேச்சுவார்த்தை மூலமே அதனைத் தீர்க்க முடியும். வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் நான் பங்கேற்ற இயலாது. மற்ற அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும்’ என்றார்.
இதுதொடர்பாக டார்ஜிலிங் தொகுதி ஜிஜேஎம் எம்எல்ஏ அமர்சிங் ராய் கூறுகையில், ‘மத்திய அரசுடன் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் எங்களது கோரிக்கை கூர்க்காலாந்து தனி மாநிலம் என்பது ஒன்றே’ என்றார்.