இந்தியா

கேரள மாநில ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் பி.சதாசிவம்

செய்திப்பிரிவு

கேரள மாநில ஆளுநராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) அசோக் பூஷண் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

திருவனந்தபுரத்தில், ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் மாநில ஆளுநராக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும்.தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவத்தின் வயது 65. மோடியின் ஆட்சியில் ஆளுநர் பதவி ஏற்கும் முதல் தமிழரும் இவர்தான்.

சதாசிவத்தை ஆளுநராக நியமிக்க உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையை நிராகரிக்கும்படி கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் 117 உறுப்பினர்கள் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர். பலத்த எதிர்ப்புகளை மீறி மத்திய அரசு இந்த நியமனத்தை நடத்தி காட்டியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது முன்பு குஜராத்தில் பதிவான போலி என்கவுன்ட்டர் வழக்கில் அவரை விடுவித்ததற்கு கைமாறாகவே பாஜக அரசு சதாசிவத்துக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

SCROLL FOR NEXT