ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாட அவரை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட தேசிய குழுவானது அதற்கான ஆக்கபூர்வ திட்டங்களை யோசிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
கலாச்சார அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த தேசியக் குழுவின் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:
இந்த குழுவில் உள்ளவர்கள் நேருவின் நினைவு எப்போதும் நிலைத்து நிற்பதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும்.இந்த திட்டங்கள் நேருவை என்றைக்கும் நாம் நினைக்க உதவுவதுடன் அல்லாமல் நமக்கு மன எழுச்சியை தருவதாகவும் இருக்கும்.
இந்த ஆண்டின் நவம்பர் 14 கொண்டாட்டம் (குழந்தைகள் தினம்) தேச கட்டமைப்பு, ஜனநாயகம், அறிவியல் ஆய்வு, தொழில் முன்னேற்றத்துக்கு நேரு ஆற்றிய பங்களிப்புக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்க வேண்டும்.
வேளாண்மை, பொது விவகாரம், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு என பலதரப்பட்ட விஷயங்களில் அக்கறை காட்டியவர் நேரு. அவற்றை நினைவு கூருவதாக இந்த கொண்டாட்டம் அமைய வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.