வேறெருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்த மேலும் சில முக்கிய தகவல்கள்:
1) இத்தாலியில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான ஜோசப் என்பவர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், ஆண்- பெண் பாகுபாடு பார்க்கிறது. அரசியல் சட்டத்துக்கு எதிரானது என தெரிவித்து இருந்தார்.
2) இதையடுத்து இந்த சட்டம் அரசியல் சாசனப்படி சரியா என உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
3) திருமணம் என்பது புனிதமான உறவு என்பதால் தகாத உறவு கிரிமினல் குற்றமே என இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
3) தகாத உறவை காரணம் காட்டி விவகாரத்து பெற முடியும். ஆனால் அதை காட்டி கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாது.
4) வேறொரு பெண் தனது கணவருடன் தொடர்பு வைத்திருந்தால் அந்த பெண் மீது இதே சட்டத்தின் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது.
5) எனவே ஒரே சட்டம் ஆண்களையும், பெண்களையும் தனித்தனியாக நடத்துவதாக வாதம் முன் வைக்கப்பட்டது.
6) இந்த சட்டம் 150 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
7 ) தகாத உறவு குற்றம் என வர்ணிக்கும் சட்டம் 497, 19-ம் நூற்றாண்டில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டது
நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்
1) இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பலாத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது.
2) தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது ஏற்கத்தக்கதல்ல
3) திருமணம் புனிதம் எனக்கூறி ஆண்களின் சொத்தாக பெண்ணை கருத முடியாது. அதன் அடிப்படையில் சட்டம் செயல்பட முடியாது.
4) தகாத உறவுக்கு தண்டனை வழங்கும் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது.
5) தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது.
நீதிபதி சந்திரசூட்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி நீதிபதி சந்திரசூட் தனியாக கூறுகையில் திருமணம் என்பதை இருவரும் மதித்து நடக்க வேண்டும். திருமண பந்தத்தில் பாலியல் சுதந்திரம் என்பது பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். செக்ஸ் உறவு என்பது தனிப்பட்ட விருப்பம் எனும்போது அதை பெண்களும் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும்’’ எனக் கூறினார்.
சட்டம் கொண்டு வரப்பட்டது எப்போது?
இந்தியா சுதந்திரமடையும் முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு கொண்டு வரப்பட்ட சட்டங்களில் ஒன்று தகாத உறவு கிரிமினல் குற்றம் என்பது. 1837ம் ஆண்டு தாமஸ் பேபிங்டன் மெக்காலே தலைமைமையிலான குழு கொண்டு வந்தது. இதற்கு 10 ஆண்டுகளுக்கு பிறகே இது சட்டமானது.
நூற்றாண்டுகளுக்கு பிறகு இந்த சட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என 1971-ம் ஆண்டு5வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது. இதற்காக சில பரிந்துரைகளையும் இந்த ஆணையம் அளித்தது. ஆனால் அது ஏற்கப்படவில்லை.
இதுபோலவே 2003-ம் ஆண்டு கிரிமினல் சட்டங்களில் மாற்றங்களை பரிந்துரைத்த நீதிபி மாலிமாத் இதுபற்றி குறிப்பிட்டார். பாலியல் சமனுக்கு எதிராக உள்ள சில வகை சட்டப்பிரிவுகளில் இதுவும் ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதை அரசு ஏற்கவில்லை.